செவ்வாய், 7 மே, 2013

நிழல் இரண்டு

தனியாய் மின்கம்ப விளக்கு
தவழ்ந்து செல்லும் மழைநீர்
தடவிச் செல்லும் காற்று
தலையாட்டும் மரம்
தயக்கத்தில் யாவும்

நிழல் இரண்டு
உடல் ஒன்றா! என?

சனி, 27 ஏப்ரல், 2013

மரமாகிப் போனவன்

மதி சூடும் இரவு மகள்
மதியின்று வரவில்லை
மனத்தோடு சென்றிடுவாய் - நாளை
மறவாமல் வந்திடுவாய் என்றாள்!

மரமென்று நினைத்தவளுக்கு-என்
மனம் எப்படி தெரியும் - உன்
மறுநாள் வருகைக்கு நான்
மரமாகிப் போனவன் என்று!

திங்கள், 31 டிசம்பர், 2012

புத்தாண்டு

காலத்தின் வேகத்தில்
கரைதாண்டாத் துகள்களாய்
ஞாலத்தின் பாவத்தில்
நாளும் இணைந்திருந்தோம்!
வேருக்குள் ஊரிட்ட
வீரத்தின் சாறெடுத்து 
போர், பகை, வஞ்சம் துடைத்து
பேர் சொல்லு மளவுக்கொரு
புது வாழ்க்கை வாழ்ந்திடவே 
புத்தாண்டை உணதாக்கிடு!
புதிய பூமி நமதாக்கிடு!

செவ்வாய், 21 ஜூன், 2011

சொர்க்கம்

பனி மேகங்களுக்கு யாரும்
பாடம் நடத்தி சென்றதில்லை
பசும் புல்வெளிக்கு உயிரளிக்க
மேகம் தவர்வதில்லை!

மனிதம் பேசும் எவனும்-இங்கு
மனிதம் காப்பதில்லை-பாமரனின்
குறைகள் கேட்கும் கடவுள்கூட
பசியை போக்கவில்லை!

நீ!
வாழ வந்த வாழ்வில்
ஏன் உய்ய மறுக்கிறாய்-நீ
பிறந்த பலன் இதுவென்று
உணர மறுக்கிறாய்!

ஏழை
கண்ணில் கடவுள் காணும்போது
மண்ணில் சொர்க்கம் காணுவாய்-உன்
உறவை உலகம் நாடும்போது
உன்னில் சொர்க்கம் நீளுவாய்!

அன்பே சிவம்

அணு கொடுத்த அண்டமோ
பாவம் போக்கும் பரமனோ
எதனை நீ ஏற்றுக்கொள்வாய்!

உணவோடு உடைகேட்டு
உயிர்வாழ திறம் கேட்கும்
பாமரர்க்கு உதவாமல் நீ!

ஐம்பொன்னில் சிலையையும்
ஆயிரம் கோவிலையும்
அமைப்பது பிழையல்லவோ!

இறுமாப்பும் கொள்ளாது
இருப்பதூஉம் நில்லாது
இதனையா வாழ்வென்கிறாய்!

அன்பெனும் சிவ மந்திரம்
ஓதாதவன் உயிரோடு
இருந்தென்ன? இறந்தும் என்ன?

சனி, 21 மே, 2011

கவிதை

மோனை எதுகை யேனையும்
சந்தத்தின் சொந்தமும்
யாப்பின் பகுப்பும் காணா கவிதையது
இளையவள் குறுநகையே..!

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

என் தாகம் தீர்க்கும் அருவி நீ!

காதல் எந்தன் காதில்-ஒரு
வார்த்தை சொல்லவே
காலம்தாண்டி காதல்கொண்டு
காத்துக்கிடந்தேன்!

பூ புன்னகைக்கும் நேரந்தனில்
செத்துவிடவே
எந்தன் நெஞ்சும் என்னை என்னை
ஆணையிடுதே!

மழையின் மேகம் கண்ட-ஆண்
மயிலைப்போலவே
உன்னை கண்ட பின்பு-என்
உள்ளம் துள்ளுதே!

நீரின் வாசம் கண்ட சிறு
பறவை போலவே!
உந்தன் வாசம் கண்டால்
என் மனமும் பறக்குதே!

தாகம் தீர்க்கும் அருவி
பேரழகி அல்லவா-என்
தாகம் தீர்க்கும் அருவி நீ!
பேரழகி நீ! அல்லவா!

மீண்டும் ஜனனம்

மண்ணோடு வான்வந்து காதல்செய்ய
காற்றோடு மழைவந்து கவிதைபாடும்!
உன்னோடு நான்சேர்ந்து காதல்செய்ய
என் மொழியோடு பேனாவும் யுத்தம் கொள்ளும்!

உன் அழகை நான் எழுத உத்தேசம்கொள்ள
உயிர் மெய் எழுத்தும் வரிசையில் நிற்கும்!

எதனோடு எதை சேர்த்து நான்
உனை வர்ணிப்பேன்-என்
உயிரோடு உன் மெய் சேர்த்தால்
நான் மீண்டும் ஜனிப்பேன்!

செவ்வாய், 2 மார்ச், 2010

எப்படிச்சொல்வேன்?

பூ பூக்கும் மலர்வனமெல்லாம்
பூ வாசம்தான்!
தேன் சிந்தும் எந்தன் நினைவில்
உன் வாசம்தான்!

மலர்தேடிச்சென்று
மது உண்ணும் வண்டு
மலர்வாடிபோனாலும்
மனம் மாறுமோ!

மணம்கொண்ட காற்றில்-என்
மனம்தேடும்போது-நீ
மறைந்தோடினாலும்-நான்
உனைத்தீண்டுவேன்!

இளந்தென்றலே-என்
இளமையும் நீயடி
உனைசேர்ந்திடும்-அந்த
இளையவன் நானடி!

பாவை பார்த்த பார்வை
என்ன எண்ணுதோ-நான்
பார்த்த பார்வை பாவம்
என்று எண்ணுதோ!

தேன் தராத பூவும்
எங்கு உள்ளது-ஆண்
விழி தொடாத பெண்மை
எங்கு உள்ளது!

நான்
காலம்கடந்த
இளைய கவிஞன்-பெரும்
காதல் நோயால்
துடிக்கும் இளைஞன்!

உனை நெஞ்சில்
சூல்கொண்ட நான்
பெண்ணல்ல
நீர் விலகிய காலம் சொல்ல!

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தள்ளிவைக்காதே

மார்கழி குளிரில் மனம் துள்ளியெழுந்து
காலைப்பனியில் கால் வைத்தபோது
கண்முன்னே பெண்முகம் மின்னுவதென்ன
அப்பொழுது என்மனம் என்னுவதென்ன-அதை
அறிவாயோ ஆடைகட்டிய நதியே-இவையெல்லாம்
உந்தன் பெண்மை செய்த சதியே!

பஞ்சணையில் நீயென்னை
தஞ்சம்கொள்ள கேட்டேனோ!
அஞ்சிவரும் காவிரியாய்
ஆர்ப்பரிக்க கேட்டேனோ!
கொஞ்சிவரும் இவன் இதழில்-உன்
பிஞ்சுமுகம் வைப்பாயோ பின்
இவன் இதழை உன் இதழால்
ஈரம் கொஞ்சம் செய்வாயோ!

வேறென்ன நான்கேட்க
சீர்கொண்ட தாரகையே
மலர்க்கூட்டம் நமைப்பார்க்க-நான்
உன் மடியில் தலைசாய்க்க
பெண்விரலும் என் மார்பில்
கோலம்போட கேட்கின்றேன்!

தாரைவார்த்தபிறகு
இவைசெய்வேன் நானென்று-நீ
தள்ளிவைத்தல் ஆகாது!
காதலியின் இதழ்முத்தம்
கெஞ்சலாய் ஒரு யுத்தம்
பின்பக்க தழுவலில்
பெண் மொத்தம் என்கைகளில்
அடைந்திடும் சுகமும்
இதன்பின் வருமோ-பெண்மை
சம்மதம் தருமோ!

சனி, 23 ஜனவரி, 2010

காதல் பசி

நடைபயிலும் நதியிடத்து
நாணம் என்ன கேட்டுச்சென்றேன்-உன்
நளினம் மட்டும் காட்டியது!

மலர்சொரியும் மரமிடத்து
வாசம் என்ன கேட்டுச்சென்றேன்-உன்
சுவாசம் மட்டும் வீசியது!

மது உண்ணும் மலர்வண்டிடம்
மலரென்ன கேட்டுச்சென்றேன்-உன்
உதட்டை தீண்டியது!

வண்டிற்கு கொடுத்திட்ட நீ
வாணனுக்கும் கொடுப்பாயோ மலரை
நானும் பசியாற!

சனி, 26 டிசம்பர், 2009

உன் நினைவு போதும்

ஒரு விழி மனதுக்குள் தேடிப்பார்க்க
உயிருக்குள் உயிரொன்று வந்து சேர்க்க
பெண்மையின் விழிகளும் உயிரை வாங்குமோ!
கனவுகள் தீர்ந்து நான் வெறுமே எழுந்து
கண்மணி நினைவினில் கொஞ்சம் தவழ்ந்து
தூக்கத்தை வென்றதால் காதல் ஆகுமோ!
உந்தன் வார்த்தை அந்த வார்த்தை
கேட்கத்தானே காத்துக்கிடந்தேன்-உன்
நினைவில் நாளெல்லாம்!
நீங்கிச்சென்றும் விலகிச்சென்றும்
என்னுள் உன்னால் உள்ள அன்பால்-நான்
தினமும் வாழ்கிறேன்!
அன்பே நீ எங்கே என்று
விழிகள் தேட முடியாது!
உன் சுவாசம் வாசம் மட்டும்
இலைகள்கூட அறியாது!
நீ களைத்த சொர்க்களெல்லாம்
கவிதையென்று நானுரைக்க
நீ எறிந்த பொருள்களெல்லாம்
அழகுபடுத்தி நான் பார்க்க
அழகே நீ ஆரியமெனினும்
உன்னை மறக்க மனம் நோகுதே!
உயிரே நீ ஏற்க்க மறுப்பினும்-உன்
நினைவால் வாழ உள்ளம் சொல்லுதே!
காலை உணவில் சாலை வழியில்
மாலை வெயிலில் உன் முகமே காண்கிறேன்!
இரவு தூக்கம் போனபின்பும்-உன்
நினைவால் நான் தூக்கம் கொள்கிறேன்!

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

என் காதலி

காற்றும்
கவிதை பாடும்-உன்
கருங்கூந்தலை
கலையும்போது!

வான்முகில்
ஓவியமாகும்-உன்
திருமுகத்தை
பதியும்போது!

மழைத்துளியும்
மரித்துப்போகும்-உன்
குருஞ்சிரிப்பில்
நனையும்போது!

மழையே மரிக்கும்போது
மழைக்கு ஒதுங்கும் நான் எம்மாத்திரம்!

உன் நிழலாக வாழ்கிறேன்

தனிமையில் என்னுடன் கைகோர்த்தே
நடக்கிறது உன் நினைவு!
ஏன்?
நான் உன்னை காதலிக்கிறேன்
இல்லை!
நான் உன்னில் வசிக்கிறேன்
இல்லை!
நான் உன்னை சுவாசிக்கிறேன்
இல்லவே இல்லை!
வேறென்ன?
நான் உன்னுடன் வாழ்கிறேன்
உன் நிழலாக!

சனி, 28 நவம்பர், 2009

பார்வை!

பெண் பார்க்கும்
மென் பார்வை
மின்சாரம் பாய்ச்சுமென்று-உன்
கண்பார்த்துக்கிடந்தேன்!
முன் பார்வை
நீ பார்க்க-உன் முன்னே
நான் நிற்க
பின் பார்வை
பார்த்தென்னை ஆட்கொண்டதேனடியோ!

திங்கள், 12 அக்டோபர், 2009

களவு

காதல் என்ன
களவாடும் தளமா-உன்
கைக்குட்டை முதல் நீ
கசக்கி எரிந்த
காகிதம் வரை
களவாட சொல்கிறதே மனம்!

-----X-----X-----X-----X-----

களவும் கற்றுமற
களவுபோன என்னை மறக்காதே!

திங்கள், 5 அக்டோபர், 2009

காதலனாக வேண்டும்

பூவா பூவை பனி
புணரும் நேரம்
பூவை மனதில்-என்
காதல் பூத்திட வேண்டும்!

சோம்பல் முறிக்கும்
ஆம்பல் மலரிடம்-என்
அன்பை மட்டும்
அறிவிக்க வேண்டும்!

ஒளியும் வளியில்
வளரும் நேரம்-என்
வலியை வளையால்
உணர்ந்திட வேண்டும்!

நீரில் நனையும்
நறுமுகையிடம்-நான்
உருகும் காரணம்
உரைத்திட வேண்டும்!

பணிக்கு செல்லும்
பனிமலரிடம்-நான்
பணிந்தவன் என்று
பகிர்ந்திட வேண்டும்!

மதிய உணவில்
மரம்கொத்தியாகி-அவள்
மனதை என் நினைவு
கொத்திப்போக வேண்டும்!

அந்தி நேரம்
அந்திமந்தாரையிடம்-அவள்
ஆணவம் பற்றி
அவிழ்த்துவிட வேண்டும்!

துயிலும் சிறிய
தும்பை மலரிடம்-என்
துன்பம் பற்றி
தெரிவிக்க வேண்டும்!

நடுநிசி நேரம்
நிலவின் துயிலை-நான்
கணவாய் மாறி
கலைத்திட வேண்டும்!

அனைத்தும்!
பெண்ணவள் என்னவள் ஆன பின்பு!

காத்திருக்கிறேன்!

என்னோடு நீ கொண்ட வார்த்தை
சில வார்த்தை என்றாலும்
மறக்காது கண்மணியே!

உன்னோடு நான் வாழ்ந்த காலம்
சில நொடிகள் என்றாலும்
தீராது பொன்மணியே!

உன் நினைவு என் கனவை
தட்டி தட்டி எழுப்புதடி
என் காதல் உன் நெஞ்சை
துளிகூட இழுக்கவில்லையா!

எப்பொழுது தோன்றுகிறதோ
அந்த காதல் வலி
அப்பொழுது சொல் என்னிடம்
அல்லது என் கல்லறையிடம்!
காத்திருக்கிறேன்!

காதல் வழங்குதியோ

காற்று கவிதையிலே என்
காதலை தூதுவிட்டேன்-அது
எந்தன் கனவுகளை-உன்
நெஞ்சில் எழுதட்டுமே!

நான் பார்க்கும் விழிச்சுடரே
பெண் பாவை பொருதியே-நான்
நோக்கும் நிலமெங்கிலும்-உன்
நிழலே தெரியுதடி!

அந்திவான முகிலே-அதில்
சிலிர்த்திடும் கருங்குயிலே-உன்
நெஞ்சில் குடியிருக்க-நான்
சரிதானா சொல் மயிலே!

ஆரிய குலமகளே
ஆதவ குலத்தோன்றலே-உன்
அன்பில் உறைந்தானடி இந்த
திராவிட திருச்சோழனே!

வானின் ஒரு மதியே-இந்த
வாணன் திருமதியே-உனை
நாளும் நினைத்திருக்க-உன்
காதல் வழங்குதியோ!

உனைப்பற்றி எழுத

வனத்த அழகில்
வளர்ந்து நிற்கும் செம்மீனே!
உன் வளர்ந்த பெண்மை
என்னை கொல்லுது செம்மானே!
உன் சிரித்த முகத்தின்
உதட்டில் வடியும் செந்தேனே!
அதை எடுத்து குடித்து
மயக்கம் கொள்ள வந்தேனே!
உதிரும் பூவின்
உதிரம் கொண்டு வந்தேனே!
உன் உயிரின் உள்ளே
ஒளிந்து கொள்வேன் பெண்மானே!
உன் கண்ணிரண்டை பார்த்தால்
காதல் செய்யத்தூண்டும்-உன்
கண்கள் பார்த்தால் எவனும்
கவிஞனாக வேண்டும்!
கவிஞனான எவனும்
கவிதை எழுத வேண்டும்!
உனைப்பற்றி எழுத
உதிர மிழக்கவேண்டும்!